கல்வி

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று தொடங்கின டிஜிட்டல் வருகை பதிவேடு (EMIS) வழிமுறை!

webteam

தமிழகம் முழுவதும் இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் வருகையை டிஜிட்டல் முறையில் செயலியில் பதிவு செய்யும் EMIS முறை செயல்பாட்டுக்கு வந்தது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் EMIS (Education management information system) எனப்படும் செயலியில் பதிவு செய்யும் முறை தொடங்கியுள்ளது. இதுவரை எழுத்து வழியில் வருகை பதிவேற்ற நோட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முறையில் ஒரு ஆசிரியர் விடுப்பு என்றால் அது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தெரிவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்.

ஆனால் இன்று முதல் அமல்படுத்தப்பட்ட செயலி பதிவேட்டு முறையினால் அன்றாட மாணவர்கள் ஆசிரியர்கள் வருகை பதிவை சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து உறுதி செய்து கொள்ள முடியும். இந்த வருகை பதிவேட்டு முறையை டிஜிட்டல் மையமாக மாற்றும் பணி தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் கடந்த ஆறு மாதங்களாக செயல் முறையில் முன்னோட்டமாக நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகை பதிவேடு எழுத்தில் பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, முழுமையாக டிஜிட்டல் மயமாகும் பணி செயலி மூலமாக தொடங்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். செயலில் பதிவு செய்யும்போது லொகேஷன் இருப்பிட ஆதாரம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதால் இதில் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து கொண்டு மட்டுமே செயலியை பதிவு செய்ய முடியும்.

மேலும் பள்ளியிலிருந்து வேறு எங்கேயும் சென்றால் அதனை முழுமையாக இருப்பிட விவரம் அறியும் செயலி மூலம் கண்டறிய முடியும் என்பதால் வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக ஆசிரியர்கள் தரப்பில் பார்க்கப்படுகிறது. இருந்தும் கடந்த ஆறு மாத காலங்களில் பயன்பாட்டில் இருந்த போது சர்வர் பிசி என அடிக்கடி பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருந்தது. எனவே இந்த செயலியின் தரத்தை உயர்த்ததற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கையும் கொடுத்துள்ளனர்.