கல்வி

கள்ளக்குறிச்சி: பிற மாணவர்கள் படிப்பை தொடர பள்ளிக் கல்வித்துறை புதிய முடிவு

நிவேதா ஜெகராஜா

கள்ளக்குறிச்சி வன்முறை ஏற்பட்ட தனியார் பள்ளியில், பிற மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு படிக்கும் 2,300 மெட்ரிகுலேசன் மாணவர்கள் மற்றும் 400 சிபிஎஸ்இ மாணவர்கள் எவ்வாறு கல்வியை தொடர வைக்கலாம் என்பது குறித்து அவர் ஆய்வு செய்வார் எனத் தகவல்கள் தெரியவந்துள்ளன. இப்போதைக்கு பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அருகில் உள்ள மாற்று தனியார் பள்ளி கல்லூரி வகுப்பறைகளில், விரைவில் அந்த பள்ளி ஆசிரியர்களை கொண்டே பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி சேதப்படுத்தப்பட்டதில் ஒரு சான்றிதழ் கூட இல்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளதால் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை உடனே கிடைப்பதற்கு விரைவில் சிறப்பு முகாம் அங்கு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.