கல்வி

சுகாதாரத் துறையின் கீழ் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: தமிழக அரசு அரசாணை

Rasus

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, இனி சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன் ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அரசு இந்த அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சிதம்ரபம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர் மனோஜ் கூறும்போது, “தற்போது உயர்க்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வந்ததை, சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவந்துள்ளனர். அதேசமயம் கட்டணக் குறைப்பு பற்றி எதுவும் தெரியவில்லை. எனவே அரசு கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்” எனக் கூறினார்.