பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழுடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயப் பாடமாக சேர்க்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “சிறுபான்மை மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மட்டுமல்லாமல், தங்கள் தாய்மொழி பாடத்தையும் சேர்க்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், இது சம்பந்தமாக இரு மாதங்களில் அரசு ஆய்வு செய்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தமிழ் முதல் பாடமாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சிறுபான்மை மொழி கட்டாயமாக்கப்படவில்லை என்றால், அந்த மொழி மெல்ல அழிந்து விடும் என்பதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயமாக்கும் வகையில் சேர்க்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை மொழி பாடத் தேர்வு எழுத 2022 மார்ச் மாதம் வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 2017-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தான் தொடர வேண்டும் எனவும், அடுத்தடுத்து வழக்குகள் தொடரமுடியாது எனக் கூறி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.