கல்வி

"மத்திய அரசு அனுமதிக்காத வரை ஓரே ஆண்டில் இரு பட்டங்களுக்கு அனுமதியில்லை" - உயர் நீதிமன்றம்

"மத்திய அரசு அனுமதிக்காத வரை ஓரே ஆண்டில் இரு பட்டங்களுக்கு அனுமதியில்லை" - உயர் நீதிமன்றம்

Sinekadhara

ஒரே கல்வியாண்டியில் இரண்டு பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்காத வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருதமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒரே கல்வியாண்டில் ஓரு பட்டத்தை கல்லூரியில் நேரடியாகவும், மற்றொரு பட்டத்தை தொலைதூர வழியிலும் பெற்றதை ஏற்க, TRB எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்ததால் விண்ணப்பதாரர் ஒருவருக்கு முதுநிலை ஆசிரியர் பணி நிராகரிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் இருவேறு தீர்ப்புகளை வழங்கிய நிலையில், முழு அமர்வு விசாரித்தது. அப்போது, ஒரே ஆண்டில் பட்டம் பெறுவதற்கு தடைவிதிக்க எந்த சட்டப்பிரிவும் இல்லை என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதேநேரத்தில் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதியை நிர்ணயிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக டிஆர்பி தரப்பில் வாதிடப்பட்டது.

ஒரே ஆண்டில் இரட்டை படிப்பை அனுமதிப்பது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் கிடைத்த பிறகு உரிய அறிவிப்பாணைகள் வெளியிடப்படும் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரே கல்வியண்டியில் பெறக்கூடிய இரு பட்டங்களை மத்திய அரசு அனுமதிக்கும் வரை, அவை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருதமுடியாது எனத் தீர்ப்பளித்தனர். இந்த முழு அமர்வின் முடிவை அடிப்படையாக கொண்டு, தனி நீதிபதி வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.