கல்வி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு: முறையாக கண்காணிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

Veeramani

நீட் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ முறையாக கண்காணிக்கும் என நம்புவதாக உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை தெரிவித்திருக்கிறது.

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகராக செயல் பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட ரஷீத் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கி்ளை உத்தரவிட்டிருக்கிறது. கேரளா மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், " நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை கட்டுப்படுகிறேன் ஆகவே  ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த விசாரணையின் போது சிபிஐ தரப்பில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து எந்தெந்த மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் நிலை என்ன என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார் .

இன்றைய வழக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பில், டெல்லியில் இதேபோல நீட் முறைகேடு தொடர்பாக வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும், அது குறித்த தகவல்களையும் சேகரித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் காலஅவகாசம் வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி, நீட் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ முறையாக கண்காணிக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என தெரிவித்து வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்திவைத்தனர்.