கல்வி

ப்ளஸ் 2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? - கல்வியாளர்கள் வழிகாட்டுதல்

JustinDurai
புதிய தலைமுறை மற்றும் பி.எஸ்.என்.ஏ கல்லூரி இணைந்து நடத்திய 'கற்க கசடற' நிகழ்ச்சியில், ப்ளஸ் 2-க்குப் பிறகு என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்பது குறித்து கல்வியாளர்கள் ஜெயபிரகாஷ் காந்தி, டாக்டர். வாசுதேவன் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகினர்.
ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், ''மாணவர்கள் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் எது வேண்டுமானாலும் படிக்கட்டும். ஆனால் டெக்னாலஜி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதைவைத்து மாணவர்கள் இனி சர்வைவல் பண்ண முடியும்.
2025-ஆம் ஆண்டில் 96 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிறது பொருளாதார ஆய்வு. எனவே இப்போதிருக்கும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. எல்லாத் துறையிலும் இருக்கிறது. குறிப்பாக எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. 11 புதிய மருத்துவக்கல்லூரி வரவிருப்பதால் சேர்க்கைக்கு தட்டுப்பாடு இருக்காது. குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்கு இதுவொரு அருமையான வாய்ப்பு.
அதேபோல் பொறியியல் படிப்புக்கும் வேலைவாய்ப்புகள் அனைத்து துறைகளிலும் குவிந்துக் கிடக்கிறது. நல்ல கல்லூரியில் சேருங்கள். இஞ்சினியரிங் படிக்கும்போதே ஜப்பானிய மொழி ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொண்டால் நிறைய வாய்ப்பு கிடைக்கும். கல்லூரி போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள்'' என்கிறார் அவர்.