கல்வி

ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலை கேம்பஸ் இன்டர்வியூ.. முழு விவரம்..!

webteam

அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கான நடப்பு ஆண்டு வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ ) ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கால் வேலைவாய்ப்புக்கான இந்த நேர்காணல் தடைபட்டிருந்தது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டடவியல் வடிவமைப்பு கல்விநிலையம் ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இங்கு இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வளாக நேர்காணல் நடத்தப்படுவது வழக்கமான நடைமுறை.

கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டிருந்த வளாக நேர்காணல் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. முதல் கட்ட நேர்காணல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நேர்காணலில் கலந்துகொள்ள 3,300 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் பங்கேற்கும் 25 வெளிநாட்டு நிறுவனங்கள், ஆண்டுக்கு 12 லட்சம் முதல் 28 லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும் பணிகளை வழங்கவுள்ளன.