கல்வி

சிஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்: ஐசிஏஐ விளக்கம்

webteam

நாடு முழுவதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை என்று இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு (ஐசிஏஐ) விளக்கம் அளித்துள்ளது. இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் சார்பில் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு (சிஏ) ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டுக்கான தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. பிறகு பீகார் தேர்தல் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது சிஏ தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதனிடையே அடுத்த ஆண்டு ஜனவரி வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் வெளியான தகவலை இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு மறுத்துள்ளது. இதுபற்றிய விளக்கத்தை ட்விட்டர் பக்கத்தில் ஐசிஏஐ பதிவிட்டுள்ளது.

சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஒரே ஷிஃப்ட்டில் மதியம் 2 மணிக்குத் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு: http://icai.org