கல்வி

பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது... அந்தந்த மாவட்டங்களில் வழங்க முடிவு

webteam

(கோப்புப் படம்)

தமிழகத்தில் ஆண்டுதோறும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியன்று மாநில அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 375 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கொரோனா பரவல் உள்ள நிலையில், விருது வழங்கும் விழாவை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனால் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விருதுகளை அந்தந்த மாவட்டத்தில் ஆட்சியர்கள் வழங்குவார்கள்.

(கோப்புப் படம்)

சென்னை தலைமைச் செயலகத்தில் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குவார். பின்னர் மாவட்டங்களில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படவுள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு காரணமாக செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறவிருந்த விழா செப்டம்பர் 7 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.