கல்வி

+2 தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி 1.30 வரை நடைபெறும்

webteam

நீதிமன்ற உத்தரவை ஏற்று பொதுத்தேர்வுகளை அரைமணிநேரம் தாமதமாக நடந்த தமிழகக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைவான பேருந்துகள்தான் இயக்கப்படுவதாக பொதுநல மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என்ற தகவலை தெரிவித்தது.

இதனையடுத்து, பொதுத்தேர்வுகள் நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாக துவங்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதாவது, வழக்கமாக 10 மணிக்கு தொடங்கும் தேர்வை, தற்போது 10.30 மணிக்கு தொடங்கி 1.30 மணிவரை நடத்த அறிவுறுத்தினர். மேலும், மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், மேல்நிலைத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு, துறை அலுவலர்களுக்கும், வழித்தட அலுவலர்களுக்கும் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களுக்கும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

24 தேதியன்று நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேவும் 26 ஆம் தேதி நடைப்பெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வும் காலை 10.30 மணிக்கு துவங்கி மதியம் 1.45க்கு முடிவடையும் வகையில் நடத்திட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.