கல்வி

பரமக்குடி: பள்ளி முன்பு விளையாடிய மாணவர் மின்னல் தாக்கியதால் பரிதாப உயிரிழப்பு!

webteam

மின்னல் தாக்கிய நிலையில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரமக்குடி அருகே நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார் கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் தாழையடி கோட்டை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கஜினி பள்ளிக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் படுகாயம் அடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நயினார் கோவில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்னல் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அவருடைய பெற்றோர் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.