மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித உள்ஒதுக்கீடு கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களையும் , மீதமுள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிறவகை பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து 85% உள்ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்ததோடு அவசர வழக்காகவும் விசாரிக்கவும் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதையடுத்து, நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது.