இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள கூடுதலாக 25 சதவிகித இடங்கள் வரை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் பயில்வதை ஊக்குவிக்க அவர்களுக்கென இந்திய கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்கள் உருவாக்க அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டது. வெளிநாட்டு மாணவர்கள் இந்திய கல்வி நிறுவனங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை படிக்க இயலும் என்றும் இதற்காக அவர்கள் நுழைவுத் தேர்வு எதையும் எழுத வேண்டியதில்லை என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனத்தில் உள்ள கட்டமைப்பு வசதிகள், பணியாளர் வசதிகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கூடுதலாக 25% இருக்கைகள் வரை கூடுதலாக உருவாக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கல்வியை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே குறைந்த அளவில் வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வந்தாலும் தற்போது அவர்களுக்கு என தனியாக இருக்கைகள் உருவாக்கப்பட உள்ளன.