கல்வி

குரூப் 4 தேர்வு - வரலாற்றிலேயே முதன்முறையாக 22 லட்சம் பேர் விண்ணப்பம்

Sinekadhara

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்துகிறது. மார்ச் 30 ஆம் தேதி முதல் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவுடன் கால அவகாசம் நிறைவடைந்தது. 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த தேர்வுக்கு 21 லட்சத்து 83 ஆயிரத்து 225 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பதவிக்கு சுமார் 300 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வரலாற்றிலேயே முதன்முறையாக குரூப் 4 தேர்வுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு முதல், குரூப் 4 தேர்வில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பொது அறிவு வினாக்கள் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.