கல்வி

"உயர்கல்வியில் சிறந்த இளைஞர்களை உருவாக்குவது வளர்ச்சிக்கு உதவும்" - வெங்கய்யா நாயுடு

Veeramani

உயர்கல்வியில் சிறந்த இளைஞர்களை உருவாக்குவது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

திருச்சி இருங்களூரில் எஸ்.ஆர்.எம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை ஆளுநர் மாளிகையில் இருந்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு காணொலி மூலம் திறந்து வைத்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை குடியரசுத்தலைவருடன் நிகழ்வில் பங்கேற்றார். திருச்சி எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் எஸ்ஆர்எம் குழும ராமாவரம் மற்றும் திருச்சி வளாக தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்தியாவின் உயர் கல்வி வளர்ச்சிக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் உயர்கல்வியில் திறமையான இளைஞர்களை உருவாக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.