குற்றம்

சென்னை: மதுபான பாட்டிலை டோர் டெலிவரி செய்து வந்த சொமேட்டோ ஊழியர் கைது

webteam

சென்னையில் மதுபான பாட்டில்களை டோர் டெலிவரி செய்து வந்த சொமேட்டோ ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் மதுபானத்தை விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை- கேஜி ரோடு சந்திப்பில் டிபி சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சொமேட்டோ பனியன் அணிந்து வந்த நபரை பிடித்து அடையாள அட்டை குறித்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். 

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர் கொண்டு சென்ற உணவு பெட்டியில் பார்த்த போது, 10 பீர் பாட்டில்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பீர் பாட்டிலை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணயில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ்(32) என்பது தெரியவந்தது. 

விசாரணையில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களுக்கு வீட்டை தேடி மதுபானம் டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது. உணவு கொடுப்பது போல் எடுத்து சென்றால் போலீசார் யாரும் சோதனை செய்யமாட்டார்கள் என எண்ணி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டி.பி சத்திரம் போலீசார் பிரசன்னா மீது வழக்குபதிவு செய்து கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.