குற்றம்

‘வலிமை’ பட பேனர் வைத்ததில் முன்விரோதம் - காவல்நிலையம் எதிரே இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை

webteam

அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே பட்டபகலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் சிவானந்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரை அதேப் பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று துரத்தி சென்று காவல் நிலையம் எதிரே வைத்து தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி, கொலை செய்துவிட்டு தப்பி ஓடும்போது 4 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்.

இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திற்கு பேனர் வைப்பதில், இருகோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கார்த்திக் என்பவர் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட கார்த்திக்கின் இளம் சகோதரர் இருந்துள்ளார். இதனால் முன்னர் கொலை செய்யப்பட கார்த்திக்கின் நண்பர்கள், இன்று கொலை செய்யப்பட கார்த்திக்கின் தம்பியை கொலை செய்ய திட்டம் போட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த 6 பேர்கொண்ட கும்பல் தம்பியை விட்டுவிட்டு அண்ணன் கார்த்திக்கை ஓட ஓட விரட்டி காவல் நிலையம் எதிரே வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. உடலை கைப்பற்றிய அம்பத்தூர் போலீசார் பிரேதப் பரிசோதனை செய்ய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.