குற்றம்

3 வயது குழந்தையை மிதித்து கொன்ற இளைஞர் - விசாரணையில் பகீர் வாக்குமூலம்!

PT

ராசிபுரம் அருகே ஆபாசப் படம் பார்த்ததற்காக உறவினர்கள் கண்டித்ததால், சித்தியின் 3 வயது குழந்தையை, காலால் மிதித்து இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில்வாசன் (32). இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதியினருக்கு நவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும், தருண் (3) என்ற ஆண் குழந்தையும் இருந்தது. கபில்வாசன் அதேப் பகுதியில் உள்ள சேகோ ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். மேலும் அதேப் பகுதியை சேர்ந்த உறவினர் பாலமுருகன் என்பவரது மகன் ராகுல் (23), கபில் வாசன் வீட்டிற்கு சென்று குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார்.

இதனையடுத்து கபில்வாசனின் மனைவி ராஜாமணி தண்ணீர் எடுப்பதற்காக சமையலறைக்கு சென்றபோது திடீரென எதிர்பாராத விதமாக தூங்கிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை தருண் கழுத்தில், இளைஞர் ராகுல் காலால் மிதித்து மற்றும் அடித்துக் கொலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாயார் ராஜாமணி கத்தி கூச்சலிடவே அருகில் இருந்த உறவினர்கள் குழந்தை தருணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக குழந்தையின் உடல் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞர் ராகுலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராகுலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ராகுல் தொடர்ந்து ஆபாசப் படங்களை பார்த்ததாகவும், அதனை உறவினர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. உறவினர்கள் தொடர்ந்து கண்டித்ததால் ஆத்திரமடைந்த ராகுல், தனது சித்தி மகனை காலால் மிதித்து கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்து அதிர்ச்சியளித்துள்ளார். மூன்று வயது குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.