ஃபரிதா கதூன்,  கிரிஷ்
ஃபரிதா கதூன், கிரிஷ் PT
குற்றம்

பெங்களூரு: திருமணம் செய்ய மறுத்ததால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கொலை செய்த இளைஞர்!

Jayashree A

பெங்களூருவில் தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலியை மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் வைத்து கத்தியால் குத்தி காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் இயங்கி வரும் (ஸ்பா) மசாஜ் சென்டரில் கல்கத்தாவைச் சேர்ந்த ஃபரிதா கதூன்(42) என்பவர் கடந்த 4 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவருக்கு 21 மற்றும் 16 வயதுக்கொண்ட இரண்டு பெண்குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் கல்கத்தாவில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், 32 வயதான கிரிஷ் என்ற ரேகன் அஹமத் என்பவர் தனியார் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஃபரிதா கதூன் பணியாற்றி வந்த ஸ்பா செண்டருக்கு அடிக்கடி சென்றுள்ளார். அங்கு ஃபரிதா கதூனுடன் கிரிஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.

இவர்களின் நெருக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் கிரிஷ் ஃபரிதாவை திருமணம் செய்துக்கொள்ள நினைத்து ஃபரிதாவை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ஃபரிதாவுக்கு இதில் உடன்பாடு இல்லாததால், கிரிஷின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் ஃபரிதா தனது குழந்தைகளை பார்க்க கொல்கத்தா சென்றிருக்கிறார். அவர் திரும்பி பெங்களூர் வரும்பொழுது தனது மகள்களில் ஒருவரை உடன் அழைத்து வந்துள்ளார். மகளும் ஃபரிதாவும், பெங்களூரில் இருக்கும் oyo ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி கிரிஷ்க்கு பிறந்தநாள் வந்துள்ளது. அதனால் ஃபரிதாவுடன் சேர்ந்து தன் பிறந்தநாளைக்கொண்டாட விரும்பிய கிரிஷ், அன்று முழுவதும் ஃபரிதாவுடன், மால், ஹோட்டல் என்று வெளியிடங்களில் சுற்றியுள்ளார். இதன் நடுவில், ஃபரிதா திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் தனது பிறந்தநாள் அன்று அவரை தீர்த்து கட்டிவிடலாம் என்று நினைத்த கிரிஷ், ஃபரிதாவுக்கு தெரியாமல் கத்தி ஒன்றை வாங்கி மறைத்து வைத்திருந்திருக்கிறார்.

அன்று முழுவதும் வெளியிடங்களில் சுற்றியபின், இரவு ஏழு மணியளவில் பூங்கா ஒன்றிற்கு ஃபரிதாவை அழைத்துச்சென்ற கிரிஷ் அங்கு மீண்டும் தன்னை திருமணம் செய்துக்கொள்ள ஃபரிதாவை வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் ஃபரிதா தீர்மானமாக மறுக்கவே, திட்டமிட்டப்படி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, 15 முறை மாறி மாறி ஃபரிதாவை குத்தியிருக்கிறார். சம்பவ இடத்தில் ஃபரிதாவும் பலியாகியுள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியில் இருந்த இளநீர் வியாபாரி ஒருவர், உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவித்தார். போலிசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கிரிஷ் அங்கிருந்து தப்பி சென்று, அருகில் இருக்கும் ஜெயா நகர் காவல்நிலையத்தில் சரண்டர் ஆகியதாக தகவல் வெளிவந்துள்ளது.