குற்றம்

திருமணம் செய்யாமல் கூட வாழ்ந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞர் கைது

webteam

போரூரில் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த பெண் தற்கொலைக்கு முயன்றதால் காதலன் கைது செய்யப்பட்டார்.

நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பக் (33), சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்து வரும் இவர், தி.நகரைச் சேர்ந்த 33 வயது உடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் சானிடைசர் மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் அந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாஜிஸ்திரேட் மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கினர்.

இதில் சம்பக் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்ததை அடுத்து போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது இருவரும் கடந்த ஒரு வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பக்கிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சம்பக்கை கைது செய்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.