குற்றம்

ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் கொலை - பழிக்குப் பழியா ?

ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் கொலை - பழிக்குப் பழியா ?

webteam

மதுரையில் ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் விரட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் உதயகுமார். இவர் தங்கள் பகுதிக்கு அருகேயுள்ள உள்ள கடைக்கு சென்றபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அவரை மறித்துள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் உதயகுமாரை தாக்கியுள்ளனர். அங்கிருந்து உதயகுமார் தப்பி ஓட முயன்றதும், அந்த இருவரும் விரட்டிச்சென்று வெட்டியுள்ளனர். ரத்தவெள்ளத்தில் சரிந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடல்புதூர் காவல்நிலைய போலீசார், உதயகுமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையான உதயகுமார் கடந்த ஆண்டு ஆஸ்டின்பட்டி பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர். எனவே பழிக்குப் பழி தீர்க்க அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.