குற்றம்

”திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூ.51 லட்சம் பறித்துவிட்டார்” - காதலி எடுத்த அதிரடி முடிவு

webteam

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி இளம் பெண்ணிடம் 51 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக பெண் கொடுத்த புகாரை தொடர்ந்து மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜனனி. இவர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவரான மனோஜ் என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் ரூபாய் 51 லட்சம் பெற்றுக் கொண்டு, தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தியதில் மருத்துவர் மனோஜ், ஜனனியை காதலித்து ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டு திருமணம் செய்ய மறுத்தது உறுதியானது. உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.