குற்றம்

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஆவடியில் இளைஞர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஆவடியில் இளைஞர் போக்சோவில் கைது

kaleelrahman

ஆவடி அருகே திருமண ஆசை காட்டி 17 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல், தென்றல் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோதி (24) என்பவரும் கடந்த ஓர் ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மாணவியின் வீட்டில் அவரது பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஜோதி, வீட்டுக்குள் சென்று மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே மாணவியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி, கர்ப்பத்திற்கு காரணம் தனது உறவினர் ஜோதி என தெரிவித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து போலீசார், ஜோதி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை இன்று கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.