சென்னை ரயிலில் சமோசா மற்றும் பழ வியபாரம் செய்து வந்தவர் ராஜீ (எ) ராஜேஸ்வரி. இவர் நேற்று மாலை எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்து சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது அதே ரயிலில் இறங்கிய 4 பேர், ராஜேஸ்வரியை மறித்துள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜேஸ்வரியை கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு மீண்டும் அதே ரயிலில் தப்பிச் சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் அழைத்து சென்றுள்ளனர். பின் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். கொலை சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் மற்றும் சைதாப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் யாரென்பது இன்னும் தெரியவரவில்லை.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லாததால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் இருப்பதாக சொல்லப்படுகிறது. குடும்ப பிரச்னையால் இக்கொலை நடந்திருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. உடனடியாக ரயில் நிலையத்தில் பெண் காவலர்களை பணியமர்த்தவும் சிசிடிவி கேமராக்கள் வைக்கவும் கோரிக்கை வைக்கின்றனர் ரயில் பயணிகள்.