குற்றம்

ஃபேஸ்புக் காதல்: திருமணம் செய்ய மறுத்ததால் ஆண் நண்பர் மீது ஆசிட் வீசிய பெண்!

EllusamyKarthik

கேரளாவில் பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆண் நண்பர் மீது அமிலம் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள இடுக்கி மாவட்டத்தின் அடிமாலி பகுதியில் கடந்த 16-ஆம் தேதி அன்று நடந்துள்ளது. இதை செய்தது 35 வயதான ஷீபா என்ற பெண் என தெரிவித்துள்ளனர் போலீசார். 

ஷீபாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஃபேஸ்புக் மூலமாக அருண் குமார் என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருண் குமாருக்கு வயது 27. நாளடைவில் இருவருக்குள்ளும் அந்த நட்பு காதலகவும் மாறி உள்ளது. அதையடுத்து ஷீபா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அருணிடம் வற்புறுத்தி வந்துள்ளார். அந்த நிலையில் ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அருணுக்கு தெரியவந்துள்ளது. 

அதனால் அவர் ஷீபாவை தவிர்க்கத் தொடங்கியுள்ளார். அதே நேரத்தில் திருமணத்திற்காக அவர் வீட்டில் வரணும் பார்த்துள்ளனர். இந்த விவகாரம் ஷீபாவுக்கு தெரிந்துள்ளது. 

இந்த நிலையில் தான் அடிமாலி பகுதிக்கு அருகே அமைந்துள்ள தேவாலயம் அருகே அருணை வர சொல்லி பேசியுள்ளார் ஷீபா. அப்போது தனக்கு கிடைக்காத அருண், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அவர் மீது தான் மறைத்து வைத்திருந்த அமிலத்தை வீசியுள்ளார். அதில் அருணின் ஒரு கண் பார்வை பறிபோயுள்ளது. தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார். 

போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஷீபாவை கைது செய்துள்ளனர். அமில வீச்சின் போது ஷீபா மீதும் அமில துளிகள் பட்டுள்ளது. அதனால் அவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Photo Credit : Shortpedia