குற்றம்

மாணவனுக்கு பாலியல் தொல்லை: அறிவியல் ஆசிரியை கைது!

webteam

தன்னிடம் டியூசனுக்கு வந்த மாணவனுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த அறிவியல் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

சண்டிகரில் உள்ள ராம்தர்பார் காலனி 31-வது செக்டரில் வசிப்பவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 34. இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளன. கணவரும் இருக்கிறார். இவர் வீட்டுக்கு அருகில் வசித்த 15 வயது மாணவன் ஒருவன் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அவனும் அவன் தங்கையும் உமாவிடம் டியூசன் படித்து வந்தனர். சில நாட்கள் கழித்து, அவர்களின் பெற்றோரிடம், ’மாணவன் 10ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு தனியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும், அதனால் அவன் தங்கையை அவனுடன் அனுப்ப வேண்டாம். அவளுக்கு நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்’ என்றார். அவர்களும் சரி என்று இருவரையும் தனித்தனியாக ட்யூஷனுக்கு அனுப்பி வைத்தனர். இதைப் பயன்படுத்திக்கொண்ட டீச்சர், மாணவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளார். கடந்த வருடத்தில் இது தொடர்ந்துள்ளது. தன்னிடம் தொடர்பு கொள்ள மாணவனுக்கு தனி சிம்கார்டு ஒன்றையும் கொடுத்துள்ளார் டீச்சர்.

இந்நிலையில் மாணவன் பாடத்தில் சரியாக மார்க் எடுக்காததால் டியூஷனுக்கு செல்ல வேண்டாம் என்று வீட்டில் கூறிவிட்டனர். பின்னர் ஏப்ரல் மாதம் மாணவனின் வீட்டுக்கு சென்ற டீச்சர், ’அவனை டியூஷனுக்கு அனுப்புங்கள், இனி நன்றாகப் படிப்பான். அதற்கு நான் கியாரண்டி’ என்று கூறியுள்ளார். அப்போதும் அவர்கள் அனுப்பவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் மகனுடன் வீட்டுக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு டீச்சர் கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவனுடன் அவனது பெற்றோர், டீச்சர் வீட்டுக்குச் சென்றனர். கணவரிடம், ‘நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டா ம்’ என்று கூறிய டீச்சர், மாணவனை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஓர் அறைக்குள் வைத்து பூட்டினார். இதைக் கண்டு மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தகராறு ஏற்பட்டது. பிறகு அக்கம் பக்கத்து வீட்டினர் தலையிட்டு மாணவனை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற டீச்சர், மாணவனை என்னுடன் அனுப்பவில்லை என்றால், உங்கள் வீட்டுக்குள் தற்கொலை செய்துகொள் வேன் என்று கூறி கையில் வைத்திருந்த டானிக் பாட்டில் ஒன்றை திறந்து வாயில் ஊற்றினார். இதனால் மாணவனின் பெற்றோருக்கு மேலும் அதிர்ச்சி.

பின்னர் இதுபற்றி சிறுவர்கள் சேவை மையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் மாணவனின் பெற்றோர். போலீசார், டீச்சரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.