குற்றம்

கணவர் மீது தகாத உறவு புகார்! மனைவி தற்கொலை: நிற்கதியில் நிற்கும் மூன்று குழந்தைகள்..!

webteam

கணவர் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டார் என்றும் போலீசார் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் வெட்டியபந்தி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவருக்கும், கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜகுமாரி என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சங்கரலிங்கம் கொத்தனார் ஆக பணியாற்றி வந்த நிலையில் அவர் மல்டி லெவல் மார்க்கெட்டிங் பிசினஸ் செய்து வந்துள்ளார். அப்போது நெல்லை என்ஜிஓ காலனியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் அங்கேயே சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ராஜகுமாரியின் உறவினர்கள் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி சேர்ந்து வாழ அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.

ஆனாலும் சங்கரலிங்கம் மகாலட்சுமி உடனான தொடர்பை விடவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து கடந்த 15ஆம் தேதி இரவு ராஜகுமாரியை கணவர் சங்கரலிங்கம் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், 16ஆம் தேதி காலையில் ராஜகுமாரி தூக்கில் தொங்கியபடி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக சிவந்திப்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த ராஜகுமாரி உறவினர்கள், அவரை கணவன் சங்கரலிங்கம் அடித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டு உள்ளார் எனவும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மேலும், சங்கரலிங்கம் மகாலட்சுமியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டனர்.

இவ்வளவுக்குப் பிறகும் தற்கொலைக்கு தூண்டியதாக கூட கணவர் சங்கரலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை பெறப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கணவனின் தகாத உறவால் மனைவி தற்கொலை செய்து கொண்டுவிட்ட நிலையில் மூன்று குழந்தைகளின் நிலை பரிதாபகரமாக மாறியுள்ளது.