குற்றம்

திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் குழந்தையை கடத்தியவர் கைது

webteam

டெல்லியில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் 9 வயது குழந்தையை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். 

டெல்லியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருபவர் கமலேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணம் முடிந்து நான்கு குழந்தைகளுக்கு தாயாய் இருக்கும் ஒரு பெண்ணை ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அந்த பெண்ணின் கடைசி குழந்தையான 9 வயது சிறுமி கடைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பவில்லை. நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த தாய் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி ஒருவருடன் சென்றது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் சிசிடிவியில் இருந்தவரை தெரியுமா என சிறுமியின் தாயிடம் கேட்டபோது அவர் தன்னை ஒருதலையாக காதலித்து வந்த கமலேஷ் என தெரிவித்தார். பின்னர், போலீசார் கமலேஷை கைது செய்து சிறுமியை மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுமியின் தாய் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் இதன்மூலம் அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கலாம் என நினைத்ததாகவும் கமலேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் போலீசார் மீட்டுள்ளனர்.