குற்றம்

விமானத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

rajakannan

ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த போது, அதன் பணியாளர்கள் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடந்த நவம்பர் 3-ம் தேதி ராஞ்சியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் ஏசியா விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பெங்களூரு காவல் நிலையத்தில் ஏர் ஏசியா பணியாளர்கள் மூன்று பேர் மீது தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் புகார் அளித்தார். பின்னர், சம்பவம் குறித்து அந்த பெண் கூறுகையில், “விமானத்தின் கழிவறை சுத்தமாக இல்லை என்பது குறித்து புகார் அளித்தேன். புகார் அளித்த என்னிடம் விமானத்தின் அதிகாரி உட்பட மூன்று பணியாளர்கள் தவறாக நடந்து கொள்ள முயன்றனர். கீழே இறக்கி விட்டுவிடுவோம் என்று மிரட்டினர். பின்னர், பெங்களூரு வந்தடைந்த பிறகும், போலீசார் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்தினர்” என்று கூறினார்.

இது தொடர்பாக ஏர் ஏசியா விமானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகார் அளித்த பெண், விமான அதிகாரிகளை தேவையில்லாத வார்த்தைகளில் திட்டியதாகவும், சமாதானப்படுத்திய பிறகும் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.