குற்றம்

வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை என பெண் புகார்: மாமனார் கைது

kaleelrahman

மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் கொடுத்த புகாரின் பேரில் மாமனார் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அண்ணா நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர், ஜெயஸ்ரீ (27). இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரைச் சேர்ந்த, சதீஷ்(31), என்வருக்கும், கடந்தாண்டு, ஜூன் 4 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, பெண் வீட்டார், 40 சவரன் நகைகள் உட்பட, 18.50 லட்சம் ரூபாய்க்கு சீர்வரிசை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், சதீஷ் வீட்டார் தொடர்ந்து, வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறி, தாம்பரம், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் ஜெயஸ்ரீ புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்படி, திருமணம் முடிந்த சில நாட்களிலேயே வரதட்சணை கேட்டு, ஜெயஸ்ரீயை மாமனார் நடராஜன், மாமியார் சாந்தகுமாரி மற்றும் சதீஷின் சகோதரர் ராஜேஷ் ஆகியோர், கொடுமைப்படுத்தி உள்ளனர்.

ஜெயஸ்ரீக்கு மாமியார் சாந்தகுமாரி சூடும் வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 6ஆம் தேதி மாமனார் நடராஜனும், 8ஆம் தேதி ராஜேஷூம் ஜெயஸ்ரீயிடம், தவறாக நடந்துள்ளனர். இதையடுத்து பாலியல் தொல்லை மற்றும் வரதட்சணை கொடுமை அதிகரித்ததால், கணவர் வீட்டில் இருந்து தப்பிய, ஜெய்ஸ்ரீ தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெய்ஸ்ரீயின் மாமனார் நடராஜனை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள, ஜெய்ஸ்ரீயின் கணவர் சதீஷ், அவரது அண்ணன் ராஜேஷ், மாமியார் சாந்தகுமாரி ஆகியோரை தேடி வருகின்றனர். இந்நிலையில், மகளிர் காவல் நிலைய போலீசார், நடராஜனின் குடும்பத்தாரை தப்ப வைப்பதற்காகவே, கைது நடவடிக்கையை தவிர்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.