குற்றம்

வீட்டு வாசலில் கோலம் போடும்போது பெண் அடித்துக் கொலை

webteam

சீர்காழி அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த ஜோதி. இவர் அரசுபள்ளி ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சித்ரா(49). இன்று அதிகாலை எழுந்த சித்ரா வழக்கம்போல் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் சித்ராவை அடித்துக்கொலை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.