குற்றம்

அத்துமீறிய காதல் விவகாரம் - சொந்த வீட்டிலேயே ஒரு கிலோ நகைகளை திருடிய பெண், காதலன் கைது

Sinekadhara

பெங்களூருவில் சொந்த வீட்டிlலேயே ஒரு கிலோ தங்க நகைகளை திருடி திருமணத்தை மீறிய காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண்ணும், காதலனும் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு அம்ருதஹள்ளி அருகே ஜக்கூரு லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் தீப்தி (24). திருமணம் முடிந்து, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த தீப்தி தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கார் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் எடுக்க ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு தீப்தி சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு மதன் (27) என்பவர் கார் ஓட்ட பயிற்சி அளித்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

ஆனால் மதனுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதுபற்றி தெரிந்தும் மதனை, தீப்தி காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பணக்கஷ்டத்தில் சிக்கி தவித்துவந்த தனது காதலனுக்கு உதவ தீப்தி முடிவுசெய்து, தனது வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக திருடி வந்து மதனிடம் கொடுத்து, அந்த நகையை ஒரு நிதி நிறுவனத்தில் அடகுவைத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் மதனும், தீப்தியும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர்.

இவ்வாறாக வீட்டில் இருந்து ஒரு கிலோ நகைகளை தீப்தி திருடி மதனுக்கு கொடுத்து உள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனது பற்றி தெரிந்ததும் தீப்தியிடம் அவரது தாய் கேட்டு உள்ளார். ஆனால் இதற்கு தீப்தி சரியாக பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் ஒரு கிலோ நகைகளை திருடியதாக தீப்தி மீது அவரது தாயே புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் தீப்தியை பிடித்து விசாரித்தபோது வீட்டில் இருந்து நகைகளை திருடி தனது காதலனுக்கு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து தீப்தியையும், மதனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்ததுடன், நகை அடகு வைத்த பணத்தில் அவர்கள் வாங்கிய 3 கார்களையும் பறிமுதல் செய்தனர்.