குற்றம்

வாஷிங் மெஷினில் வைத்திருந்த சாவியை எடுத்து நகை திருட்டு - அதிர்ந்து போன வீட்டு உரிமையாளர்!

Sinekadhara

பொள்ளாச்சி அருகே வீட்டில் நுழைந்து 14 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். வாஷிங் மெஷினில் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டுக்குள் சென்று நகை திருடியது விசாரணையில் அம்பலமானது.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காட்டம்பட்டியைச் சேர்ந்தவர் கிரிகதிர்வேல்(54). இவரது குடும்பம் காட்டம்பட்டி சாலை தோட்டத்தில் இருந்த வீட்டை பூட்டி விட்டு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று வெளியே சென்றுள்ளனர். மாலை வீடு திரும்பி பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, கிரி கதிர்வேல் நெகமம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் கதவு உடைக்கப்படாமல் பீரோவில் இருந்த பணம் திருடு போனது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அருகில் உள்ள கோழிப் பண்ணையில் பணியாற்றி வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி(32) என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 14 சவரன் நகை மற்றும் 4,500 ரூபாய் பணத்தை கிரி கதிர்வேல் வீட்டில் இருந்து திருடியதை ரேவதி ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கிரி கதிர்வேல் குடும்பத்துடன் வெளியே சென்றதைப் நோட்டமிட்டு வீட்டின் முன்பு இருந்த வாஷிங் மெஷினில் அவர்கள் வைத்துச்சென்ற சாவியை எடுத்து, கதவைத் திறந்து பீரோவில் இருந்த பணம் மற்றும் 14 சவரன் நகையை திருடியது தெரியவந்தது. பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேவதியை கைதுசெய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.