குற்றம்

விவாகரத்தான மனைவியின் மகளை கொன்ற முதல் கணவர் - பொறாமையில் கொடூரச்செயல்

webteam

இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்த விவாகரத்தான மனைவியின் மகளை முதல் கணவர் கொன்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஜமராஜாநகர் கிராமத்தில் மகேஷ் என்ற நபரும், கவுரம்மா என்ற பெண்ணும் திருமணம் செய்து வசித்து வந்தனர். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதையடுத்து மகாதேவ் சுவாமி என்பவரை கவுரம்மா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதேபோன்று ராதம்மா என்ற பெண்ணை மகேஷ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கவுரம்மாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நீண்ட வருடங்களாகியும் மகேஷ் மற்றும் ராதம்மாவிற்கு குழந்தை பிறக்கவில்லை.

கவுரம்மா தனது கணவர் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இதைக்கண்டு பொறாமை அடைந்த மகேஷ், அவரது மகிழ்ச்சியை சிதைக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக கவுரம்மாவிற்கும், அவரது இரண்டாவது கணவருக்கும் பிறந்த மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த கொலைத்திட்டத்திற்கு அவரது இரண்டாவது மனைவி ராதம்மாவும் உடந்தையாக இருந்துள்ளார். திட்டமிட்டபடியே, கடந்த திங்கட்கிழமை உறவினர் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு திரும்பிய 5 வயது பெண் குழந்தை மகாலக்ஷ்மியை மகேஷ் தூக்கிச்சென்றுள்ளார்.

அந்தக் குழந்தையை தண்ணீர் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். வீட்டில் தனது இரண்டாவது மனைவி ராதம்மாவுடன் இணைந்து குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி மறைத்து வைத்துள்ளார். குழந்தையை காணவில்லை என தேடிய கவுரம்மா மற்றும் மகாதேவ், பின்னர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

அப்போது தனது முதல் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக கவுரம்மா கூறியுள்ளார். அதன்படி, மகேஷ் வீட்டில் அதிரடியாக சோதனை செய்த போலீசார், பிளாஸ்டிக் பேக்கில் கட்டி வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் மகேஷ் மற்றும் ராதம்மாவை கைது செய்தனர்.