குற்றம்

“அலுவலக பணிக்கு கணவர் உதவவில்லை” - இன்சூரன்ஸ் நிறுவன பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

“அலுவலக பணிக்கு கணவர் உதவவில்லை” - இன்சூரன்ஸ் நிறுவன பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

webteam

தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பெண் ஊழியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது அலுவலக பணிக்கு உதவி புரியாததால் கணவருடன் சண்டையிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிகணேஷ் (29). இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிப்புரிந்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரியதர்ஷினி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டிலேயே இருந்து பிரியதர்ஷினி பணிபுரிந்து வந்தார். கடந்த 29ஆம் தேதி இரவு பிரியதர்ஷினி பணிபுரியும் போது கணவர் ஹரி கணேஷிடம் உதவி கேட்டதாக தெரிகிறது. ஆனால் உதவி செய்ய ஹரி கணேஷ் மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

கோபமடைந்த பிரியதர்சினி தனி அறையில் உறங்கினார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் பிரியதர்ஷினியின் அறை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஹரிகணேஷ் கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் உடலை கைப்பற்றி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவர் ஹரி கணேஷிடம் ஏ.கேகே நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.