குற்றம்

தங்கை முறை பெண்ணுடன் காதல் திருமணம்: கணவர் கொலை; மனைவி தற்கொலை

webteam

நெல்லையில் தங்கை முறை உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்த நபர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை பழையபேட்டையை சேர்ந்தவர் காளிராஜ். இவர் தங்கை முறை உறவு கொண்ட அதேபகுதியைச் சேர்ந்த மேகலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தார் தொடர்ந்து காளிராஜ் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் காளிராஜ் தனது மனைவியுடன் நெல்லை சட்டக்கல்லூரி எதிரே உள்ள ரஹ்மத் நகர் சாலையில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதி, காளிராஜ் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய மேகலா, தனியார் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மேகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.