குற்றம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் மகனால் நேர்ந்த கொடூரம்

JustinDurai

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட  நிலையில் மருத்துவமனையில் அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலி மற்றும் அவரது மகன் சோஹல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

முதல் தகவல் அறிக்கையின்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் ஏற்பாடு செய்த பிறந்தநாள் விழாவிற்கு சிறுமி சென்றுள்ளார். அவர் ஒன்பதாம் வகுப்பு மாணவி என்றும் கூறப்படுகிறது. பிறந்தநாள் விழா முடிந்து வீடு திரும்பியபோது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உள்ளூர் சுடுகாட்டில் அவசரமாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் சோஹலை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், அவரது தந்தையும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான சமர் தனது குடும்பத்தினருடன் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமி விருந்தில் மது அருந்தும்படி வற்புறுத்தப்பட்டதாகவும், ஒரு பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆண்களால் அவர் வீட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும் சிறுமியின் தந்தை போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: மூன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி! 14 வருடங்களுக்கு பின் கைது!