குற்றம்

அதிக வட்டி தருவதாக ரூ. 2.75 கோடி மோசடி – 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது

kaleelrahman

விருதுநகரில் அதிக வட்டி தருவதாக ஆசைக்காட்டி 2.75 கோடி ரூபாய் வரை மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் ஜான் செல்வராஜ், விக்னேஷ் குமார் (31), இவரது மனைவி மணிமேகலை (28,) மணிமேகலையின் சகோதரி சர்மிளா (25) மற்றும் சிவகாசி ரிசர்வ் லைனைச் சேர்ந்த கோகில வாணி ஆகிய ஐவரும் சேர்ந்து சிவகாசி தென்றல் நகரில் இனிக்கோ வங்கி என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறியதை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீடு செய்த பணம் பெரும்பாலானோருக்கு திரும்பி தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த விஷ்ணு பிரியா என்பவர் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரூ. 14 லட்சம் மோசடி செய்ததாக இனிகோ வங்கி இயக்குநர்கள் ஜான் செல்வராஜ், விக்னேஷ் குமார், மணிமேகலை, சர்மிளா, கோகில வாணி, ஆகியோர் மீது புகார் அளித்தார். இதன் பேரில் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 100-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் விக்னேஷ் குமார்,அவரது மனைவி மணிமேகலை, மணிமேகலையின் சகோதரி சர்மிளா, மற்றும் கோகிலவாணி ஆகிய நால்வரையும் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஜான் செல்வராஜை தேடி வருகின்றனர்.