குற்றம்

விருதுநகர்: பெற்ற குழந்தையை 2.50 லட்சத்திற்கு விற்ற தாய் உட்பட 9 பேர் கைது

kaleelrahman

விருதுநகர் அருகே பெற்ற குழந்தையை விற்ற தாய் உட்பட ஒன்பது நபர்களை சூலக்கரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (25). இவரது கணவர் இறந்த நிலையில் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவருடைய ஒரு வயது பெண் குழந்தை விற்கப்பட்டதாக கூரைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து குழந்தையை விற்ற கும்பலை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சூலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர், கலைச்செல்வி மற்றும் கலைச்செல்வியின் தந்தை கருப்புசாமி என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரனையில் குழந்தை இடைத்தரகர்கள் மூலம் மதுரையைச் சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. குழந்தையை சூலக்கரை காவல் நிலைய போலீசார் நேற்று இரவு மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மீட்டனர். மேலும் குழந்தை விற்க பயன்படுத்திய இரண்டு கார்கள் 2 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணத்தை சூலக்கரை காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குழந்தையின் தாய் கலைச்செல்வி குழந்தையின் தாத்தா கருப்பசாமி குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியினர் கருப்பசாமி - பிரியா இடைத்தரகராக செயல்பட்ட கார்த்திக், மகேஸ்வரி மாரியம்மாள், கார் ஓட்டுநர் செண்பகராஜன் மற்றும் நந்தகுமார் உள்ளிட்ட ஒன்பது பேரை குலக்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.