செய்தியாளர்: மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் தனியார் நிறுவன அலுவலகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் கடந்த மாதம் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, சிவகாசி மீனாட்சி காலனியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் மணிகண்டன் (37) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது.
மெக்கானிக் வேலை செய்து வந்த மணிகண்டன், கடந்த 4 மாதங்களாக சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 11 பைக்குகளை திருடியுள்ளார். இதையடுத்து திருடிய வாகனங்களை குறைந்த விலைக்கு வெவ்வேறு நபர்களிடம் விற்பனை செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து விற்பனை செய்த நபர்களிடமிருந்து பைக்குகளை மீட்ட போலீசார், மெக்கானிக் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.