விருதுநகர் அருகே குடிபோதையில் மின் இணைப்பு சம்பந்தமாக அரசு போக்குவரத்துக் கழக நடத்துநருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் நடத்துநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் அருகே உள்ள ஈ.முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் சந்தன மகாலிங்கம் (36). இவர் அரசு போக்குவரத்துக் கழகம் சாத்தூர் பணிமனையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு வரும்போது மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவரது வீட்டின் அருகே சென்ற மின்வயர் வெட்டப்பட்டு அருகில் இருந்த 3 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஏற்கெனவே இருந்த முன்பகையால் நடத்துநர்தான் மின்இணைப்பை துண்டித்ததாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் குணசேகரன் (அண்ணன் தம்பி) ஆகிய இருவரும், சந்தன மகாலிங்கத்தை அருகில் உள்ள காட்டுக்குள் வா யார் பெரியவர் என்று மோதி பார்த்து விடுவோம் என்று அழைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அருகில் உள்ள சோள காட்டிற்குள் சந்தனமகாலிங்கம் கட்டையுடன் சென்றுள்ளார். அங்கு அரிவாளுடன் இருந்த சகோதரர்கள் இருவரும் சேர்ந்து சந்தனமகாலிங்கத்தை வெட்டிக் கொலை செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சகோதரர்களை தேடி வருகின்றனர். சாதாரணமான வாய் வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்துள்ள சம்பவம் அக்கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.