மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது pt desk
குற்றம்

விருதுநகர் | மான் வேட்டையில் ஈடுபட்டதாக 4 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் வேட்டை நாய்களை வைத்து மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: K.கருப்பஞானியார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் விவசாய நிலத்திற்குள் இரை தேடி வரும் மான்களை வேட்டை நாய்கள் வைத்து சிலர் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் உத்தரவின் பேரில் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் மலையடிவாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரெங்கர் கோயில் பீட்டிற்கு உட்பட்ட விவசாய தோட்டத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி தெருவைச் சேர்ந்த தங்கராஜ் (30), முத்துகிருஷ்ணன் (38) ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் தலை மற்றும் அதன் மாமிசம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் வேட்டைக்கு உதவியாக இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்திரகுமார் (26), நாகராஜ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.