குற்றம்

விழுப்புரம்: மது போதையில் பள்ளி கட்டடத்தை சேதப்படுத்தியதாக இளைஞர் கைது

webteam

கண்டாச்சிபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை கற்களால் அடித்து நொறுக்கும் சமூக விரோதிகளின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், இளைஞர் ஒருவரை கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே வீரங்கிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி மது போதையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பள்ளியின் கண்ணாடி, கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் கதவுகளை, பெரிய கற்களால் அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று கண்டாச்சிபுரம் அருகேயுள்ள வீரங்கிபுரத்தைச் சேர்ந்த ஏழுமலை (20) என்ற இளைஞரை கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.