குற்றம்

விழுப்புரம்: பெற்றோரை இழந்த சிறுமி பாலியல் வன்கொடுமை - 9 பேர் போக்சோவில் கைது

Veeramani

விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் உறவினர், முதியவர் உள்பட 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பெற்றோரை இழந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பெரியம்மாவின் வீட்டில் தங்கி கல்வி கற்று வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தபோது, அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்த புகாரில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர் மோகன், முதியவரான மண்ணாங்கட்டி என்ற வெங்கடேசன் உள்பட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மேலும் 4 பேரும், சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிந்தும் புகார் அளிக்காததால் பெரியம்மாவும் கைது செய்யப்பட்டனர். ஏழுமலை என்பவர் ஆந்திராவின் நெல்லூரில் கைது செய்யப்பட்டார். இதனிடையே, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 1098 மற்றும் 100 ஆகிய எண்களில் புகார் அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.