இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தவர்கள்
இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தவர்கள் PT
குற்றம்

தவணை கட்டாததால் இரவில் பைக்கை பறிமுதல் செய்ய நிதிநிறுவன ஊழியர்கள்.. தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்!

Jayashree A

விழுப்புரத்தில் தவணை முறையாக கட்டவில்லை என்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய சென்ற தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை கிராம மக்கள் கட்டி வைத்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மழவதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி என்பவர் தனியார் நிதி நிறுவனத்தின் கடன் பெற்று மூலம் இருசக்கரம் வாங்கியுள்ளார்,

பல மாதங்களாக லட்சாதிபதி மாதத் தவணை கட்டவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மௌலானா என்பவரும், கடலூர் மாவட்டம் வீராணம் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும், நேற்று இரவு ஒரு மணி அளவில் லட்சாதிபதியின் வீட்டிற்கு சென்று அவரின் இரு சக்கர வாகனத்தை தூக்கி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட கிராம பொதுமக்கள் இருவரையும் ஊருக்குள் திருட வந்த திருடன் என நினைத்து அவர்களை கடுமையாக தாக்கி கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்களை கண்டாச்சிபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்களா இல்லை வாகனங்களை திருடுவதற்கு வந்த திருடர்களா என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.