குற்றம்

கணவருடன் திட்டமிட்டு பள்ளி தாளாளரை கடத்திய ஆசிரியை!

கணவருடன் திட்டமிட்டு பள்ளி தாளாளரை கடத்திய ஆசிரியை!

webteam

வாணியம்பாடியில் பள்ளி தாளாளர் கடத்தப்பட்ட வழக்கில் கணவருடன் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார். இவர் ஆத்துமேடு பகுதியில் கடந்த 20
ஆண்டுகளுக்கு மேலாக ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறார். தினமும் தனது நண்பருடன் காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இவர், அதற்காக நியூடவுன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை, நியூடவுன் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட செந்தில்குமாரின் செல்போனில் இருந்து, அவரது அண்ணன் உதயசந்திரனுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய உதயசந்திரன் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் செல்போனில் பேசிய செந்தில்குமார் தான் கடத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக ரூ.50 லட்சத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு வரும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸிடம் தகவல் அளித்துவிட்டு, அந்த இடத்திற்கு விரைந்த அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அதற்குள் கடத்தல் கும்பல் இடத்தை மாற்றிவிட்டனர். பின்னர் பல இடங்களுக்கு மாறி மாறி அலையவிட்டு, இறுதியில் தருமபுரி மாவட்டம்
காரியமங்கலம்-பாலகோடு இடையே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு உதயசந்திரனை தனியாக வரவழைத்து பணத்தை
பெற்றுள்ளனர். 

இதையடுத்து வாணியம்பாடி பொறுப்பு டிஎஸ்.பி தனராஜ் தலைமையில், வேலூர் மாவட்ட நுண்ணறிவு போலீஸாரும் இணைந்து
கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்காக கிருஷ்ணகிரி பகுதி சுங்கசாவடி மற்றும் தேசிய
நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும் போலீசாரின் கையில் சிக்காமல் அந்த கும்பல்
தலைமறைவாகியது. 

இந்நிலையில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் பணத்தை வாங்கிவிட்டு செல்லும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவில்
பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைக்கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், சென்னை ரெட்ஹீல்ஸ் பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்த ரூ.15 லட்சம் மீட்கப்பட்டது. அவர்களின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தப்பட்ட செந்தில்குமாரின் பள்ளியிலேயே ஆசிரியராக பணிபுரிந்த பிரியா என்பவர், தனது கணவருடன் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தை நடத்தியது தெரியவந்ததுள்ளது. இதைத்தொடர்ந்து ஆசிரியை பிரியாவையும், அவரது கணவர் ஹரியையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.