குற்றம்

வேலூர்: தாயின் கண்முன்னே பாலிடெக்னிக் மாணவன் அடித்துக் கொலை - தாய்மாமன் கைது

kaleelrahman

கே.வி.குப்பம் அருகே தாயின் கண்முன்னே பாலிடெக்னிக் மாணவன் அடித்துக் கொலை. தாய்மாமனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூரை சேர்ந்தவர் ஜெய்சங்கர் - கிரிஜா தம்பதியினரின் மகன் தருண்குமார் (20). இவர் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த சின்ன லத்தேரியிலுள்ள தாய் கிரிஜாவின் சகோதரர் ரமேஷ் (தாய்மாமன்) என்பவரின் வீட்டில் தங்கி குடியாத்தத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், தாய்மாமாவின் மகள் அடிக்கடி ஆண் நண்பர் ஒருவரை நேரில் சந்தித்து பேசுவதாக தருண்குமார் தனது தாய் மாமான் ரமேஷிடம் கூறியுள்ளார். அப்போது, என் வீட்டிலேயே இருந்துகொண்டு என் மகளையே தவறாக பேசுகிறாயா என ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தருண்குமாரை அடித்துள்ளனர்.

இதுகுறித்து தருண்குமார் தனது தாய் கிரிஜாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெங்களூருவில் இருந்து சின்ன லத்தேரிக்கு வந்த கிரிஜா இந்த பிரச்னை குறித்து சகோதரர் ரமேஷிடம் முறையிட்டுள்ளார். அப்போது ரமேஷ், அவரது மனைவி மகன் ஆகியோர் சேர்ந்து கொண்டு மீண்டும் தருண்குமார் மற்றும் தாய் கிரிஜாவை தாக்கியுள்ளனர்.

இதில் தருண் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தருண்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தாய் கிரிஜா லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பிறகு தாய்மாமன் ரமேஷை கைது செய்து நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்