குற்றம்

வேலூர்: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 64 வயது முதியவர் போக்சோவில் கைது

kaleelrahman

வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 64 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கோரந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழில் செய்யும் தம்பதியினரின் 11 வயது சிறுமி வீட்டில் தனியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்ற முதியவர், வீட்டினுள் புகுந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் வாயை பொத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரிடமிருந்து தப்பித்த சிறுமி, நடந்த சம்பவத்தை அருகில் உள்ள தனது சித்தப்பாவிடம் கூறியுள்ளார். உடனடியாக சிறுமியின் உறவினர்கள் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுஜாதா, காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முனுசாமியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு 64 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.