செங்குன்றத்தில், ஆட்டோவிற்கு தரசான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முருகேசன் என்பவரின் எல்பிஜி ஆட்டோவிற்கு தரசான்று வழங்க மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், ரூ.3000 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் முருகேசன், ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 12 பேர் அடங்கிய போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முருகேசனிடம் கொடுத்து போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கத்திடம் கொடுக்க வைத்தனர். அப்போது அங்கு இருந்த கம்பியூட்டர் ஆப்பரேட்டர் பிரகாஷ், புரோக்கர் மோகன்ராஜ் ஆகியோர் பணத்தை வாங்கி ஆய்வாளரிடம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களிடம் 4 மணி நேரமாக விசாரணை செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், 3 பேரையும் கைது செய்தனர்.